Thursday, March 22, 2018

சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து ஒத்திகை பார்த்த மகிந்த

  Editor       Thursday, March 22, 2018

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அருகில் மகிந்த ராஜபக்சவின் ஆசனம் உள்ளது.

நேற்று நாடாளுமன்றத்துக்கு அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

அப்போது சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவையில் இருக்கவில்லை.

சில நிமிடங்கள் கழித்து, நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் அதனைப் பார்த்து விட்டு, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவிடம், தவறான ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருக்கும் விடயத்தை கூறினார்.

சனத் நிசாந்த உடனடியாக மகிந்தவுக்கு அருகே சென்று ஆசனம் மாறி அமர்ந்திருப்பதை தெரிவித்தார். உடனடியாக மகிந்த ராஜபக்ச சம்பந்தனின் ஆசனத்தை விட்டு எழுந்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்ட மகிந்தவுக்கு அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வாழ்த்துக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரா.சம்பந்தனிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கான முயயற்சிகளை கூட்டு எதிரணி மேற்கொண்டு வரும் நிலையில், சம்பந்தனின் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தது சபையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
logoblog

#hashtag

Thanks for reading சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து ஒத்திகை பார்த்த மகிந்த

No comments:
Previous
« Prev Post